தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து டி.ஆர். பாலுவின் பேச்சு...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மக்களவையில் திமுக மூத்த எம்பி டி.ஆர். பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்றவகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசிலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை மத்திய சட்டத்துறை அமைச்சர் இன்று அறிமுகம் செய்துள்ளார்.
இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டவுடன், இதில் முன்மொழியப்பட்டுள்ள மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Advertisement
தொடர்ந்து, மக்களவையில் டி.ஆர். பாலு பேசியதாவது:
”மூன்று மசோதாக்களும் ஒன்றோடு ஒன்று இணைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று மசோதாக்களையும் தனித்தனியாக தாக்கல் செய்ய அரசு முன்வரவில்லை. மூன்று மசோதாக்களையும் பிரித்து பார்ப்பதற்குகூட சிரமமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கிறது. ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யப்படுவதற்கான அவசியமில்லை. தொகுதி மறுவரையறைக்காக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்துப் போராட்டம் நடத்தியுள்ளார். நாங்கள் மகளிருக்கான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். தொகுதி மறுவரையறை செய்யாமல் தற்போதைய எண்ணிக்கையைக் கொண்டு உடனடியாக மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.