பெண்கள் இடஒதுக்கீடு மசோதா முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்
வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பை இந்தியா இழந்துள்ளது..
பெண்கள் இடஒதுக்டு மசோதாவை காங்கிரஸ் கட்சி தடுத்ததன் மூலம், பெண் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பை இந்தியா இழந்திருப்பதாக ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
2029 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதையும், மக்களவையின் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமையன்று மக்களவையில் தோல்வியடைநதது.
இந்த மசோதா மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டு வழங்க உத்தேசித்தது. மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். வாக்களித்த 528 உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற இந்த மசோதாவிற்கு 352 வாக்குகள் தேவைப்பட்டன.
Advertisement
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தடுத்ததன் மூலம், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், பெண் அதிகாரமளித்தலை நோக்கிய இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தைத் தடுத்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
இது வெறும் அரசியல் நீதியான முட்டுக்கட்டை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் சமமான பிரநிதித்துவத்தை பெறத் தகுதியுள்ள லட்சக்கணக்கான பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். இந்த தேசம் இதை நினைவில் கொள்ளும் என்றும் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில், சட்டப்பேரவை அமைப்புகளில் பெண்களின் அதிகாரத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவறவிட்டுவிட்டதாக ஜனசேனா கட்சியின் நிறுவனரும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தால், பெண்களுக்கு உரிய மரியாதை கிடைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.