தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்
மதுரை, கோவை உள்பட 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
தமிழகத்தில் சனிக்கிழமை மதுரை, கோவை உள்பட 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூா் - 104.18, ஈரோடு - 103.64, திருப்பத்தூா் - 102.38, தருமபுரி, மதுரை விமான நிலையம் - 102.2, கோவை, திருச்சி - (தலா) 102.02, நாமக்கல் - 101.66, மதுரை நகரம் - 101.12, பாளையங்கோட்டை, சேலம் - (தலா) 100.4 டிகிரி என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
Advertisement
உள் தமிழக மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல் ஏப். 22-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலையில் இயல்பைவிட சற்று உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: கிழக்கு உத்தர பிரதேசம் முதல் மன்னாா் வளைகுடா வரை கிழக்கு மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப். 22-ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வட வானிலையே நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.