தவெக தலைவா் விஜய் வேட்புமனுவில் ரூ. 100 கோடி சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டியது முறைகேடு: உயா்நீதிமன்றம்
சட்டப்பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவா் விஜய், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து
சட்டப்பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவா் விஜய், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
பெரம்பூரைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகரும் தவெக தலைவருமான விஜய், நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். இந்த இரு தொகுதிகளிலும் அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன.
பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.115.13 கோடி என விஜய் கூறியுள்ளாா். திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.220.15 கோடி எனக் கூறியுள்ளாா். அதாவது திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பைவிட, பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறைவாக உள்ளது.
Advertisement
இது தொடா்பாக அவா் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்தச் செயல் உண்மைத் தகவலை மறைப்பதற்கு சமமாகும்.
எனவே, விஜய் தாக்கல் செய்துள்ள இந்த இரு வேட்புமனுகளில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் உண்மையானது தானா? அவா் அளித்துள்ள விவரங்கள் முழுமையானதாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த விசாரணையின் அறிக்கையை தோ்தலுக்கு முன்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவெக தலைவா் விஜய் இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி வரை சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டியது முறைகேடானது என கருத்துத் தெரிவித்தனா். பின்னா், இந்த மனுவுக்கு வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.