போதமலைக்கு முதல்முறையாக சாலைவழிச் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
போதமலைக்கு முதல்முறையாக சாலைவழிச் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக...
நாமக்கல்: ராசிபுரம் தொகுதி போதமலையில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு முதல் முறையாக சாலை வழித்தடத்தில் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது போதமலை. இந்த மலையில் கீழுர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.
இந்த மலைக் கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாமல் இருந்தது. சுமாா் 7 கி.மீ. தொலைவு ஒற்றையடிப் பாதையில் நடந்துசெல்ல வேண்டும்.
Advertisement
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலின்போது, போதமலைக்கு ஒற்றையடிப் பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டன.
நாடு சுதந்திரம் பெற்றது முதலே தலைச் சுமையாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன.
இதனிடையே, போதமலை வாழ் மக்களுக்கு ரூ. 140 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கப்பட்டு, முதல்கட்டமாக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதமலை கிராமத்துக்கு முதல்முறையாக சாலை வழித்தடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.