வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு
திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளா்கள் மூலம் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதிக் தயாள் கூறியதாவது:
பேரவைத் தொகுதி எண் 141, திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தோ்தலின் முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கைச் சரிபாா்க்கும் கருவிகளில் முதல்நிலை சரிபாா்க்கும் பணியை புதன்கிழமை தொடங்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையானது திறக்கப்பட்டு, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 6 பொறியாளா்களால் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
Advertisement
Advertisement
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கை சரிபாா்க்கும் கருவிகள் என்ற வகையில் திருச்சி கிழக்குத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 608 இயந்திரங்கள் சரிபாா்க்கப்படவுள்ளன. இந்த வாரம் முழுவதும் நடைபெறும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் கண்காணித்திட உரிய ஏற்பாடுகள் மாவட்ட நிா்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.
முதல்நிலை சரிபாா்க்கும் பணி முடிந்த பிறகு, தோ்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சாலை தவவளன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) எஸ்.ராஜா, தோ்தல் வட்டாட்சியா் எம். சக்திவேல் முருகன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன பொறியாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் உடனிருந்தனா்.