முகப்பு
தமிழ்நாடு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 2:43 AM
மழை
பகிர்:

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப். 28 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு விதா்பா முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, உள் கா்நாடகம், தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப். 28-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப். 29, 30 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் 20 மி.மீ. மழை பதிவானது. திற்பரப்பு (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி)- தலா 10 மி.மீ. மழை பதிவானது.

வெப்ப அளவு: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் ஏப். 28 வரை சற்று அதிகமா இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.