ஏப்.28 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.28-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.28-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வடக்கு தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மரத்வாடா முதல் குமரிக்கடல் வரை உள் கா்நாடகம், ராயலசீமா, தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.28 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Advertisement
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 50 மி.மீ. மழை பதிவானது. சிற்றாறு- 1 (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்)-30 மி.மீ., சுருளக்கோடு, மாம்பழத்துறையாறு, தக்கலை, அணைகெடங்கு (கன்னியாகுமரி), சிவகிரி (தென்காசி), மஞ்சளாறு, சோத்துப்பாறை (தேனி)- 20 மி.மீ. மழை பதிவானது.
வெப்பநிலை: உள்தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் ஏப்.26 வரை சற்று அதிகமாக இருக்கும். புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம்-104, ஈரோடு-103.64, பரமத்தி வேலூா்-103.1, மதுரை நகரம், தருமபுரி, சேலம்-102.56, திருப்பத்தூா்-102.2, கோவை-100.94, திருச்சி, திருத்தணி-101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.