பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூத்த அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தைச் சேர்ந்த உதவி லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) பெண்ணுக்கு மூத்த அதிகாரியான தலைமை லோகோ இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் 13 அன்று, ஒரு அறிமுகப் பயிற்சிக்கான தேர்வின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
அறிமுகப் பயிற்சித் தேர்வின் போது தான் தனியாக இருந்ததைக் கண்ட செல்வராஜ், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அப்பெண் குற்றம் சாட்டினார். பின்னர், தேர்வு முடிந்து வீட்டிற்கு சென்றதும் அவரிடம் போனில் தான் செய்த தவறுக்கு செல்வராஜ் மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், அதனை மறந்துவிடுமாறு கூறிய செல்வராஜ் இதுபோன்று இனிமேல் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரில், “தலைமை லோகோ இன்ஸ்பெக்டர் டி. செல்வராஜ் தன் உடலில் உதடு, இடுப்பு, தொடை, தோள்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி தொட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க சேலம் கோட்ட மூத்த மின் பொறியாளர் புகார் குழுவை நியமித்தார். விசாரணையில், போன் பதிவுகள் மூலம் செல்வராஜ் குற்றம் செய்தது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சேலம் கோட்டத்தின் ஈரோடு பணிமனையிலிருந்து செல்வராஜை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்த புகார் குழு, எதிர்காலத்தில் இதுபோன்ற புகார் எழுந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவரை எச்சரித்தனர்.
புகார் குழுவின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜை கோயம்புத்தூர் கோட்டத்திற்கு இடமாற்றம் செய்தது.
பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த அலுவலக வளாகத்தினுள் தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ அக்குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பாக அப்பெண் மேல்முறையீடு செய்துள்ளார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் அவர் அளித்த மேல்முறையீட்டு புகாரில், "அந்தச் சம்பவம் வெறும் தொடுதல் அல்லது உடல்ரீதியான தொடர்பு கொள்ளுதல் மட்டுமல்ல. மாறாக, அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 74 மற்றும் 75 பிரிவுகளின் கீழ், என்னை மானபங்கம் செய்யும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் ஆகும்" என்று குறிப்பிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் குற்றவாளிக்கு வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டிருப்பது பற்றிய புகார் குழுவின் பரிந்துரைகள் வேதனையளிப்பதாக தனது மேல்முறையீட்டில் அப்பெண் கடுமையான ஆட்சேபணை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை புகார் குழு அலட்சியமாகக் கையாள்வதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் குற்றச்சாட்டில் ரகசியத்தன்மையைப் பேணாமல், விசாரணை அறிக்கையின் நகலை ஒரு பொது ஆவணம் போல பணியாளர் குழு வழங்கியது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற விவகாரங்களில் ரகசியத்தன்மையைப் பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.