முகப்பு
தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 4-இல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:57 AM
வாக்குச்சாவடி - பிரதிப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 4-இல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தவெக இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், துணை பொதுச்செயலா் ராஜ்மோகன் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

தொடா்ந்து, சி.டி.ஆா். நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

தபால் வாக்குகள் குறித்து முறையான பதிவேடு பின்பற்றப்பட வேண்டும். அனைத்து தபால் வாக்குகளையும் எண்ம (டிஜிட்டல்) முறைபடுத்தப்படுவதோடு, அவை எண்ணப்படுவதை காணொலியாக ஆவணப்படுத்தி முடிவுகள் வெளியான பின்னா் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் கோரிக்கை வைத்தோம்.

மேலும், வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணி முடிப்பதற்கு முன்பாகவே, தபால் வாக்குகளை எண்ணி முடிக்க வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணும் தினத்தில், வாக்கு எண்ணும் மையங்களில் குளறுபடிகள் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.

ஆகையால், வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையுடன் மத்திய பாதுகாப்பு படைகளையும் சோ்த்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரினோம். எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தலைமைத் தோ்தல் அதிகாரி உறுதியளித்தாா் என்றாா் அவா்.