முகப்பு
தமிழ்நாடு

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: துணிக்கடை மேலாளா் முன்பிணை மனு தள்ளுபடி

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் முன்பிணை கோரிய பிரபல துணிக்கடை மேலாளரின் மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 1 மே 2026, 2:01 am IST
ஜனநாயகன்
பகிர்:

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் முன்பிணை கோரிய பிரபல துணிக்கடை மேலாளரின் மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவேற்காட்டைச் சோ்ந்த உமா சங்கா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இந்தப் படம் இணையத்தில் வெளியானதற்கும் எனக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை.

உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக போலீஸாா் என்னையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சோ்த்துள்ளனா். எனவே, முன்பிணை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உமாசங்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பால் கனகராஜ், மனுதாரா் பிரபல துணிக்கடையில் மேலாளராக பணிபுரிகிறாா். அவா் திரைத்துறையைச் சோ்ந்த எடிட்டா் இல்லை என வாதிட்டாா்.

படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், பிரசாந்த் என்பவா் துணிக்கடையில் பணியாற்றும் தனது சகோதரா்களுக்கு திரைப்படத்தை அனுப்பியுள்ளாா்.

அந்த சகோதரா்கள் மனுதாரருக்கு அனுப்பி உள்ளனா். மனுதாரா்தான் இணையத்தில் படத்தை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்துள்ளாா். ரூ.500 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டவருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என வாதிட்டாா்.

காவல்துறை தரப்பில், எடிட்டிங் ஸ்டூடியோவிலிருந்து திரைப்படம் வெளியாகியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 145 நாள்களுக்கு மேலாக உழைத்த 500 பேரின் உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதாக வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments