தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணியில் இரவு முதலே பக்தர்கள் குவிந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இரவு முதலே திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தீா்த்தவாரி, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறவுள்ளது.
அதிகமான பக்தர்கள் வருகைப்புரிவதால், கட்டண தரிசனத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
பாதுகாப்பு கருதி தூண்டுகை விநாயகா் கோயில், திருச்செந்தூா் கோயில் வளாகப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் கடற்கரையில் தயாா் நிலையில் மீட்பு படகுகள் வீரா்களும், தீயணைப்பு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் கூடுதல் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
பெளர்ணமி தினம் என்பதால் திருப்பரங்குன்றத்தில் கிரிவலப் பாதையிலும் பக்தர்கள் காவடி எடுத்தவாறு குவிந்து வருகின்றனர்.
இதேபோன்று பழனி கிரிவலப் பாதையிலும் மயில், பால் காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பாதையில் ஒழுங்குபடுத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் உயா் கோபுரங்கள் அமைத்து பக்தா்களுக்கு போலீஸாா் வழிகாட்டி வருகின்றனா். தவிர, பக்தா்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்ட கியூஆா் கோடுடன் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் மலையேறும் இடத்தில் மோப்ப நாய்களுடன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.