புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை பாஜக அரசு அடகு வைக்கக் கூடாது! - மு.க. ஸ்டாலின்
கேஜரிவால் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...
அரசியலுக்காக புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை மத்திய பாஜக அரசு அடகு வைக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் இன்று தில்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது என்றும் நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்றும் வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேஜரிவால் கதறி அழுதார். 'உண்மை வென்றது' எனவும் மோடியும் அமித் ஷாவும் தீட்டிய சதித்திட்டம் என்றும் குற்றம்சாட்டினார்.
கேஜரிவால் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"குறுகிய கால அரசியலுக்காக மத்திய பாஜக அரசு, புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. கொஞ்சம் வெட்கப்படுங்கள்.
இவை அனைத்திலும் உறுதியாக நின்று உண்மை வெளிப்பட வழிவகுத்ததற்கு நண்பர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் பதிவுக்கு அரவிந்த் கேஜரிவாலும் மணீஷ் சிசோடியாவும் நன்றி தெரிவித்துள்ளனர்.