சென்னை நகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக ‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று(ஜன. 14) தொடக்கி வைத்தார்.
சென்னை அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்தில், பழமை வாய்ந்த அரசுப் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.
சென்னை உலா என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, இன்று (ஜன. 14) சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் – “சென்னை உலா” - விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்து இயக்கத்தை, சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்து, பயணம் மேற்கொண்டார்.
“சென்னை உலா” பேருந்து - "ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப்" சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட வட்டச் சுற்றுப் பாதையில் இயக்கப்படும், இதனால் பண்டிகைக் காலத்தில் நகரின் பாரம்பரிய அடையாளத்தை சென்னைவாழ் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்கால மற்றும் பாரம்பரியத்துடன் கூடிய 5 பேருந்துகள்:
பழங்கால/பாரம்பரியம்-1980களின் காலகட்ட பேருந்துகள் — சென்னையின் பொதுப் போக்குவரத்து பரிணாமத்தை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்தத்திலும் ஏறவும் இறங்கவும் கூடிய ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் (HO-HO) மாதிரி - அணுகல் மற்றும் வசதி உள்ளது.
இந்தப் பாரம்பரியப் பேருந்தில், மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் உள்ள சிறப்பு சேவைகள்:
சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் – ரூ. 50 மட்டுமே.
சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மெரீனா கடற்கரை மற்றும் நடத்துநரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், சென்னை ஒன் செயலி வழியாக மின்னணு பயண சீட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சொகுசுப் பேருந்து (Deluxe) கட்டணத்தில் மற்ற பேருந்துகளைப் போல இப்பேருந்தில் பயணிக்கலாம்.
பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த சேவை ஜனவரி 16–18 காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும்.
வார நாள்களில் மாலை 4 மணி முதல் இரவு 1 மணி வரையிலும், வார இறுதி நாள்கள்/பொது விடுமுறை நாள்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும்.
அடுத்தடுத்த பேருந்து சேவை 30 நிமிட இடைவெளியுடன் இருக்கும்.
இதைப் போல் வின்டேஜ் தோற்றத்தில் உள்ள பேருந்துகள் உலகளவில் முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது. நமது சென்னை மாநகரத்திலும் மக்கள் சேவையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) – “சென்னை உலா” பாரம்பரியப் பேருந்து விருப்பமான நிறுத்தத்தில் ஏறி, பிடித்தமான இடத்தில் இறங்கி ரசிக்கலாம். மீண்டும் அடுத்து வரும் “சென்னை உலா” பேருந்தில் உங்கள் பயணத்தைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.