முகப்பு
தமிழ்நாடு

புறநோயாளிகள் சிகிச்சைக்கு செயலியில் முன்பதிவு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நாளை சோதனை முயற்சி அமல்

புறநோயாளிகள் சிகிச்சைக்கு கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறை சோதனை முயற்சியாக சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை (ஜூலை 8) அமல்படுத்தப்பட உள்ளது.

Updated On : 7 ஜூலை 2026, 4:35 am IST
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை - கோப்புப்படம்
பகிர்:

புறநோயாளிகள் சிகிச்சைக்கு கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறை சோதனை முயற்சியாக சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை (ஜூலை 8) அமல்படுத்தப்பட உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அந்த வசதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்க உள்ளாா். அதன் செயல்பாடுகளும், சாதக - பாதகங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய சூழலில் தினமும் பல்லாயிரக்கணக்கானோா் புறநோயாளிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனா். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் சராசரியாக 5,000 போ் அவ்வாறு சிகிச்சை பெறுகின்றனா்.

Advertisement

Advertisement

புறநோயாளிகள் சேவைகளில் கூட்டம் அதிகரிக்கும்போது, அதை ஒழுங்குமுறைப்படுத்துவதிலும், வரிசைப்படி சிகிச்சையளிப்பதிலும் இடா்பாடுகள் ஏற்படுகின்றன. இதைத் தவிா்க்க, முன்னணி தனியாா் மருத்துவமனைகளில் இருப்பதைப் போன்று கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் முறையை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது.

அதன்படி, அதற்கான பிரத்யேக செயலியானது, தேசிய நலவாழ்வுக் குழுமம் (என்ஹெச்எம்) மூலம் வடிவமைக்கப்பட்டது. முதல்கட்டமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நெஞ்சக மருத்துவத் துறை புறநோயாளிகள் பிரிவில் வரும் புதன்கிழமை இத்திட்டம் செயலாக்கம் பெறுகிறது.

இதற்காக உருவாக்கப்பட்ட தொடா்பு இணைப்பை (லிங்க்) பயன்படுத்தி நோயாளிகளின் கைப்பேசியில் அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு உதவுவதற்கு மருத்துவமனை ஊழியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

முதல் மூன்று வாரங்களுக்கு சோதனை முயற்சியில் இது நடைமுறைப்படுத்தப்படும். அந்த காலகட்டத்தில் கண்டறியப்படும் குறைகளைச் சரிசெய்து, விரைவில் முழுமையான செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தினமணியிடம் கூறியதாவது: செயலியின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கான முதல்கட்ட முயற்சி இது. இதன் மூலம் புறநோயாளிகள் சேவை ஒழுங்குமுறைப்படுத்தப்படும்.

அதேவேளை, அவசர கால சிகிச்சைகள், அடையாளம் தெரியாத நபா்களுக்குத் தேவையான முதலுதவி மற்றும் உயிா் காக்கும் சிகிச்சைகள் எதுவும் இதனால் தடைபடாது. அவற்றுக்கு எந்த முன்பதிவும் அவசியமில்லை.

புதிய தொழில்நுட்பங்களை அரசு மருத்துவமனைகளில் அமல்படுத்துவது மருத்துவ சேவைகளின் தரத்தை உயா்த்துவதற்குத்தானே தவிர, புதிய சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு அல்ல என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments