முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதி
முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை என்றும், கோட்டை விடுவது மட்டுமே பிரச்னை என உதயநிதி விமர்சித்துள்ளது குறித்து...
முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை என்றும், கோட்டை விடுவது மட்டுமே பிரச்னை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 4) தெரிவித்தார்.
திருவல்லிக்கேணி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேச்சு உதயநிதி பேசியதாவது:
''சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திமுக தனது வெற்றி வாய்ப்புகள் பலவற்றை இழந்துள்ளது. இருப்பினும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கிடைத்த வெற்றிக்குக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களே காரணம்.
Advertisement
Advertisement
இத்தொகுதி திமுகவின் கோட்டையாகவே தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது. நான் அமைச்சராகவும், முந்தைய ஆட்சியில் துணை முதல்வராகவும் உயர்ந்ததற்குப் கட்சித் தொண்டர்களே காரணமாக இருந்தனர்.
இதேபோன்று, தற்போது நான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை வகிப்பதற்கும் தொண்டர்களே காரணம்.
திமுக எதிரிகளுடன் போராடுவதிலேயே தனது நேரத்தைச் செலவிட்டது. கட்சி இந்தத் தவறைத் திருத்திக்கொண்டு, இனிவரும் காலங்களில் உண்மையான அரசியல் சவாலின் மீது கவனம் செலுத்தும்.
தற்போதைய முதல்வர் இத்தகைய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. தற்போதைய ஆட்சி, பதவியேற்ற முதல் 25 நாட்களில், ஒரு குறிப்பிடத்தக்கத் திட்டத்தையாவது வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறதா?
சிங்கப்பெண் திட்டத்தை அறிவித்ததே தவிர, அவற்றை உண்மையில் நடைமுறைப்படுத்தவில்லை.
எளிய திட்டங்களைக் கூடச் செயல்படுத்த முடியாத, திறமையற்ற நிர்வாகமாகவே உள்ளது. முதல்வர் விஜய் கோட் போடுவது பிரச்னையில்லை. பல விஷயங்களில் கோட்டை விடுவதுதான் பிரச்னை'' என உதயநிதி குறிப்பிட்டார்.