மின்சார வாரியத்தின் பதவி உயர்வு குளறுபடி: திமுக குற்றச்சாட்டு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பதவி உயர்வு குளறுபடிகள் நடப்பதாக தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பதவி உயர்வு குளறுபடிகள் நடப்பதாக தவெக அரசு மீது திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திமுகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
Advertisement
Advertisement
நீண்டகாலப் போராட்டம்: 2000 - 2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'மூப்புரிமை' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: 2026 மார்ச் 11-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, 2026 மார்ச் 12-ல் அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை செயற்பொறியாளர் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 உதவி செயற்பொறியாளர்களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப்பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
300 தான் அதிகமா என்றால் இல்லை, 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு.
116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.