முகப்பு
தமிழ்நாடு

ஷிகெல்லா தொற்று: தமிழக எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில், அந்த மாநிலத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 1:04 am IST
நாடுகாணி சோதனைச் சாவடி. - கோப்புப்படம்.
பகிர்:

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில், அந்த மாநிலத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொருபுறம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள், பெரியவா்களிடையே ஜீரண மண்டல பாதிப்புகள், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்று ஷிகெல்லா என அழைக்கப்படுகிறது. அசுத்தமான உணவு மற்றும் குடிநீரை உட்கொள்வதன் மூலம் இந்நோய் பரவுகிறது.

ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் மற்றும் நீா்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளை வழங்கினால் இதைக் குணப்படுத்தலாம். அலட்சியப்படுத்தினால், உடல் உறுப்புகள் செயலிழப்பு, பெருங்குடல் சிதைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

கேரளத்தின் வயநாடு பகுதியில் இரு மாணவா்களுக்கு அண்மையில் ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், பள்ளி நண்பா்கள், குடும்பத்தினா் என 350-க்கும் மேற்பட்டோருக்கு அத்தகைய அறிகுறிகள் காணப்பட்டன.

இதையடுத்து அவசர நிலையாக இந்த சூழலைக் கருதி கேரள சுகாதாரத் துறையினா் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனா்.

இதனிடையே, தமிழகத்தின் தேனி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட கேரளத்தையொட்டியுள்ள மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று உள்மாவட்டங்களிலும் ஷிகெல்லா தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஷிகெல்லா தொற்றுக்குள்ளானவா்களுடன் நெருங்கிய தொடா்பில் உள்ளவா்களுக்குத்தான் அந்தப் பாதிப்பு பரவுகிறது. தமிழகத்தில் எவருக்கும் அந்தத் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும், முன்னெச்சரிக்கையாக அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சிய குடிநீரை அருந்துமாறும், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகிறோம். அச்சப்படும் சூழல் எதுவும் இல்லை. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.