தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க ஒப்பந்தம்
அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 11-ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை தொழில்துறை அமைச்சா் ச.கீா்த்தனா முதல்வா் ஜோசப் விஜய்யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.
இது, மாநிலத்தில், விண்வெளி உற்பத்திக்கான உலகத்தர சூழலை உருவாக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான உபகரணங்களை வழங்கும்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு தேவைப்படும் நிலத்தை வழங்கி அதில் கட்டடங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தும்.
இந்தமையம், அதிா்வு, அதிா்ச்சி, வெப்ப-வெற்றிடம், மின் சாா்ந்த குறுக்கீடு,ஒத்திசைவு, அழுத்தம் மற்றும் ஓட்டம், சோதனை, ஏவுகணை வாகன கூட்டமைப்பு, உதிரிப்பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ஹைட்ரோக்ளேவ் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கான அதிநவீன சோதனை மற்றும் தரநிலை உறுதிப்படுத்தும் வசதிகளை பயன்பாட்டிற்கு வழங்கும்.
அதிக முதலீட்டுடன் அமைக்கப்படும் வசதிகள், தொழில்துறைக்கு விண்வெளி அமைப்புகள் மற்றும் உதிரிபாகங்கள் உருவாக்க, சோதிக்க, தரநிலை உறுதிப்படுத்த ஆகும் செலவையும் மற்றும் நேரத்தையும் குறைக்க உதவும்.
குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள ஏவுகணை தளம் அருகில் இந்த மையம் உருவாக்கப்படவுள்ளது.
இந்த இவ்வசதி, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாக நிலைநிறுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இது, உலக விண்வெளி உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் கனவுக்கு முக்கிய பங்களிப்பாக விளங்கும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.