ஆட்சியமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்? பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன்!
அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள் என்ற பட்டியலை வெளியிடட்டுமா? என்று தவெகவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திங்கள்கிழமை கலந்துகொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேவை ஆளுநருக்கு தெரியாது, அரசுக்குதான் தெரியும். எங்களை பொறுத்தவரை ஆளுநர் என்பவர் மேனேஜர்தான். ஒரு மாநிலத்தின் ஆளுநராக மோடியின் உறவினரோ, அமித் ஷாவின் உறவினரோ கூட நியமிக்கப்படலாம். ஆளுநர் தேவையில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. துணை வேந்தர் நியமனங்களை மாநில அரசே மேற்கொள்ளும்” என்றார்.
Advertisement
Advertisement
இதனை விமர்சித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”அரசியலமைப்பின் அடிப்படைக் கூடத் தெரியாமல் அமைச்சராகியுள்ள நிர்மல் குமார் அவர்களே.
மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்து கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் மக்களையே தனது குடும்பமாக எண்ணி, பல பத்தாண்டுகளாக மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து வாழும் நமது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் மாண்பைக் குறைக்கும் வகையில் நீங்கள் வைத்துள்ள பொறுப்பற்ற விமர்சனங்கள், உங்கள் அரசியல் அறிவின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தங்கள் ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பெருகி வரும் பாலியல் குற்றங்கள், வன்முறைகள், சொந்தக் கட்சியினரின் அட்ராசிட்டிகள் உள்ளிட்டவைகளை மறைத்து மக்களை மடை மாற்றுவதற்கு, வெறுப்பரசியலைக் கையிலெடுக்கும் உங்களுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
எனவே, அரசியலிலும், கல்வியிலும், மக்கள் சேவையிலும் அனுபவம் வாய்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து வரும், பிரதமர் மீது இப்படியொரு கீழ்த்தரமான விமர்சனத்தை வைத்ததற்கு நீங்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அரசுப் பதவியில் இருக்கும் நீங்கள் இனியும் இதுபோன்ற ஆதாரமற்ற அரைகுறை விமர்சனங்களை தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும், ஆட்சியமைத்த பிறகு ஆளுநரே தேவையில்லை என வெட்டி வீராப்பு காட்டும் நீங்கள், தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க முடியாமல் எத்தனை முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றீர்கள்? ஆட்சியமைப்பதற்காக தொலைபேசியில் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள்? என்ற பட்டியலை நான் வெளியிடட்டுமா? எனவே, இனியும் இதுபோன்ற அரசியல் ஸ்டண்ட்களை செய்யாதீர்கள் அமைச்சரே” என்று குறிப்பிட்டுள்ளார்.
Whom did you contact to form the government? Shall I release the list? Nainar Nagendran!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.