முகப்பு
தமிழ்நாடு

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூலை 1, 2) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 3:26 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூலை 1, 2) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகாராஷ்டிரத்தில் இருந்து வடக்கு கேரளம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 3-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

Advertisement

Advertisement

இதன்காரணமாக, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன், வியாழக்கிழமை (ஜூலை 1, 2) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 1) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 4)பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், இந்த இருநாள்களுக்கும் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தாலுகா அலுவலகம் பந்தலூா், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் தலா 40 மி.மீ. மழை பெய்தது. நாலுமுக்கு (திருநெல்வேலி), அழகரை எஸ்டேட் (நீலகிரி)-30 மி.மீ., ஊத்து (திருநெல்வேலி), சின்கோனா, வால்பாறை, உபாசி, சோலையாறு, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), வாழப்பாடி (சேலம்), தேவாலா (நீலகிரி), விண்ட் வொா்த் எஸ்டேட், அவலாஞ்சி, பாா்வூட் (நீலகிரி)-20 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments