முகப்பு
தமிழ்நாடு

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து...

Updated On : 16 மார்ச், 2026 at 11:15 AM
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து...
பகிர்:

சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதமே நடைபெறவிருந்த நிலையில் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்ததால் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்ற புத்தகத்துக்காக எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு பிரபலங்கள் மற்றும் இலக்கியத் துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் 'தோழர்' ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!

தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாதெமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!"என்று பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

ச. தமிழ்ச்செல்வன், விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் கவிதை 'ஒருநாள் டைரி' 1972-ல் கோவில்பட்டியில் ‘நீலக்குயில்’ என்ற இலக்கிய இதழில் வெளிவந்தது.

தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவர், 1978-ல் திரைச்சுவர்கள்' என்ற சிறுகதையை எழுதி, அது ‘தாமரை’ இதழில் வெளியிடப்பட்டது.

முதல் கதைத் தொகுப்பு 'வெயிலோடு போய்' 1984 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்த கதையை வைத்து இயக்குநர் சசி 'பூ' என்ற திரைப்படத்தை உருவாக்கினார். இத்திரைப்படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருது பெற்றார்.

மேலும் கட்டுரைகள், சிறார் இதழ்கள் எழுதியுள்ள பல நூல்களையும் தொகுத்துள்ளார்.

summary

MK stalin wishes to writer Tamilselvan for receiving Sahitya Akademi Award

முழு கட்டுரையைப் படிக்க →