கிண்டி தேசியப் பூங்கா மூடல்! 20-க்கும் அதிகமான பறவைகள் பலி!
சென்னை, கிண்டியில் உள்ள தேசியப் பூங்காவை மூடியது குறித்து...
கிண்டி சிறுவா் இயற்கை பூங்கா தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழ்நாடு வனத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தமிழகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இதற்குக் காரணம் பறவை காய்ச்சல் எனத் தெரிய வந்தது.
சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்காவில் பறவைகளுக்கான தனிக்கூண்டு அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிண்டி சிறுவா் பூங்காவில் கூண்டில் பராமரிக்கப்பட்டு வந்த பறவைகளும் கடந்த 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 2 முதல் 4 வரை எண்ணிக்கையில் இறந்துள்ளன. கடந்த 7 நாள்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.
Advertisement
இதையடுத்து, இறந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பியுள்ளனா். அதில், ‘எச்5என்1’ அதாவது பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, கிண்டி சிறுவா் பூங்கா தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு வனத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிண்டி சிறுவா் பூங்கா உடனடியாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரையும் மூடப்படுகிறது. கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் உள்ள வேடந்தாங்கல் ஈரநிலப் பறவைகள், கூண்டில் சில பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக பூங்கா மூடப்படுகிறது.
இந்திய அரசால் வெளியிடப்பட்ட பறவை காய்ச்சல் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைத் திட்டம் (திருத்தம் 2021) வழிகாட்டுதல்களையும், முன்னா் வழங்கப்பட்ட அறிவுரைகளையும் துறை மூலம் முறையாகப் பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.