கிண்டி தேசியப் பூங்கா மூடல்! 20-க்கும் அதிகமான பறவைகள் பலி!
சென்னை, கிண்டியில் உள்ள தேசியப் பூங்காவை மூடியது குறித்து...
சென்னை, கிண்டியில் உள்ள தேசியப் பூங்காவில் பறவைக் காய்ச்சல் (H5N1) காரணமாக 20-க்கும் மேற்பட்ட பறவைகள் பலியானதால் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) பூங்கா மூடப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கும் கிண்டி தேசியப் பூங்காவில் ஏராளமான பறவைகள் உள்ளன. இதைக் கண்டுகளிக்க நாள்தோறும் பெரிவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பூங்காவுக்கு வருகைப் புரிகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை முதலே கரண்டிவாயன், கூழைக்கடா, செங்கால் உள்ளிட்ட நாரைகள், கொக்குகள் போன்ற 20 - க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன.
உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வின் முடிவில், பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், பூங்காவில் உள்ள மற்ற பறவைகளுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு அவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
முன்னதாக, சென்னை அடையாறு பகுதியில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கவும், முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை நன்கு வேகவைத்து சாப்பிடவும் மக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.