முகப்பு
தமிழ்நாடு

எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி.

Updated On : 24 மார்ச், 2026 at 3:46 AM
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:

எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா? என்று நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

தயார்நிலையை மக்களிடம் ஒப்படைக்க முடியாது. எதற்குத் தயாராக வேண்டும், தலைமைக்கா, அல்லது அதன் இல்லாமைக்கா?

பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா?

கரோனாவுக்குத் தயாரானதுபோல் மேற்காசிய போர் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் பிரதமர்.

மார்ச் 11 ஆம் தேதி

போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்.

மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன்.

மார்ச் 12 ஆம் தேதி

நிலைமையின் தீவிரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

மார்ச் 14 ஆம் தேதி

தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் எல்பிஜி-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம்!

எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!

தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணை பெறத் தேவையில்லை.

உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.

உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம்.

அப்போதே கேட்டேன்: மக்கள் நலனைக் காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை.

மார்ச் 15 ஆம் தேதி

தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.

மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” என்று அவரின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Stalin has said that the people of the country are asking the question, "Is the Prime Minister ready to protect us?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.