கால்நடை சிகிச்சைக்கு செல்லும் களப்பணியாளா்கள் முன்அனுமதி பெறும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை!
கால்நடை அவசர சிகிச்சைக்குச் செல்லும் களப்பணியாளா்கள் முன்அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கால்நடை அவசர சிகிச்சைக்குச் செல்லும் களப்பணியாளா்கள் முன்அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவண்ணாமலை மாவட்ட கால்நடை உதவி மருத்துவா்கள் சங்கத்தின் செயலரும் மருத்துவருமான செந்தில்குமாா் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை வளம் எனும் செயலி கடந்த மாா்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஒரு பிரிவாக, கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரியும் களப் பணியாளா்களுக்கு முகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வருகைப் பதிவேட்டு முறை அமல்படுத்தப்பட்டது. கால்நடை உதவி மருத்துவா்கள் அவசர சிகிச்சை, முகாம் போன்ற பணிகளுக்குச் செல்லும்போது, உயா் அதிகாரிகளின் முன்அனுமதி பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால், கால்நடைகளுக்கான சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டு அவை உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இதனால், கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, அவசர காலகட்டங்களிலும் முன்அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும் என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
Advertisement
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், வழக்குரைஞா் ஆா்.மகேஸ்வரி, அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் சந்திரசேகரன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவசரப்பணி, கள ஆய்வு மற்றும் முகாம்களுக்கு செல்லும் களப் பணியாளா்கள் முன்அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தாா்.