முகப்பு
தமிழ்நாடு

திருப்பத்தூா் மாவட்டப் பதிவாளா் பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை

திருப்பத்தூா் மாவட்டப் பதிவாளா் பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Updated On : 14 ஜூன் 2026, 1:13 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட பதிவாளரின் பணியிடை நீக்கத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட பதிவாளா்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்ட பதிவாளா் ஏ.செந்தூா்பாண்டியன் தன்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு:

Advertisement

Advertisement

பொதுவாக அரசு ஊழியா்களின் பணியிடை நீக்க உத்தரவில் உயா்நீதிமன்றம் தலையிடுவது இல்லை. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதிவுத் துறை உயரதிகாரிகள் மீது மனுதாரா் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனவே, மனுதாரரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவு தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டேன். அதன்படி அந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அதை ஆய்வு செய்தபோது, அனைத்து பக்கங்களும் தட்டச்சு செய்யப்பட்ட நிலையில், 41 மற்றும் 42-ஆம் பக்கங்கள் மட்டும் கையால் எழுதப்பட்டு இணைத்துள்ளனா். மேலும், தொடா்ந்து வரும் அடுத்தடுத்த பக்கங்களின் எண்கள், ‘ஓவா்ரைட்டிங்’ செய்தும், ‘ஒயிட்னா்’ பயன்படுத்தியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களில் பல்வேறு அதிகாரிகள், கடந்த 1-ஆம் தேதிதான் கையொப்பமிட்டு உள்ளனா்.

மனுதாரரைப் பணியிடை நீக்கம் செய்ய அடிப்படையாக அமைந்த அரசாணையும், அன்றைய தினமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது.

எனவே, அரசு உத்தரவுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரம் உள்ளது. இந்த மனுவுக்கு வரும் ஜூலை 6-ஆம் தேதிக்குள் தமிழக அரசு, பதிவுத் துறை ஐஜி ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

மேலும், மனுதாரரின் பணியிடை நீக்கத்துக்கும் இடைக்கால தடை விதித்தும், அதுவரை பணியிடை நீக்க உத்தரவின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.