இடதுசாரிகளுடன் இணைந்து முடிவு எடுப்போம்: திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ. திருமாவளவன் தெரிவித்தது தொடர்பாக...
நீண்ட காலமாக மதச்சார்பற்ற அரசியல் களத்தில் இடதுசாரிகளுடன் இணைந்தே பயணித்து வருகிறோம், எதிர்காலத்திலும் இணைந்தே முடிவு எடுப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காரல் மார்க்ஸ் பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வீரபாண்டியன் பேசியதாவது, ”கார்ல் மார்க்ஸ் பிறந்த நாளில் அவரை நினைவு கூறுகிறோம். மார்க்ஸ் என்னும் சொல்லே பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. ஆனால் தொழிலாளர் வர்க்கத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தியவர், அவரது திசைதான் மானுட திசையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
Advertisement
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தப் பிறகு, தவெகவிற்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. உடனே விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ”நான் பேசுகிறேன் எனக் கூறி செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது பேசிய அவர்,
தேர்தல் முடிவு திமுக கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உள்ளது. எங்களது முயற்சி வெற்றி அடைந்து மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் எந்த வகையிலும் மதவாத சக்திகள் வந்து விட கூடாது நுழையகூடாது என நினைத்தோம் அதுபோல் நடந்துள்ளது எனத் தெரிவித்தார்.
நாங்கள் எடுத்த மாபெரும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.
வருகின்ற 7 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்புறங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிப்பீர்களா, முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு,
”இதுவரை அது குறித்து எதுவும் சிந்திக்கவில்லை, முடிவும் எடுக்கவில்லை எனவும் இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் நீண்ட காலமாக மதசார்பற்ற அரசியல் களத்தில் ஒன்றாக பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் இணைந்தே முடிவு எடுப்போம் எனக் கூறினார்.
தவெக அழைத்தால் அங்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு, உங்கள் யுகத்திற்கு எல்லாம் பதில் கூறமுடியாது எனத் தெரிவித்தார்.