விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தது குறித்து...
விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள் நடைபெறுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சனிக்கிழமை வெளியிட்ட காணொலிப் பதிவில், ”கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட சில தொகுதிகளில் சில விசிக பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்ற தகவல் எனக்கு வந்துள்ளது.
அதுதொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், இந்தத் தேர்தலில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றியதாக கூட்டணிக் கட்சி தலைவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தொல். திருமாவளவன் தெரிவித்ததாவது:
”நான் வெளியிட்ட விடியோவில், நிறைய இடங்களில் விசிகவினர் பணியாற்றவில்லை என்று நான் கூறவில்லை, சில இடங்களில்ல் என்றுதான் நான் கூறினேன். அது, எங்கள் கட்சித் தொண்டர்களை நெறிப்படுத்துவதற்காக தெரிவித்த கருத்து. ஓரிரு தொகுதிகளில் உள்கட்சி பிரச்னை காரணமாக அவ்வாறு செயல்பட்டார்கள் என்று சொன்னேன்.
திமுக கூட்டணிக்காக எங்கள் கட்சி தோழர்கள் ஆற்றியிருக்கிற பணி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. இது திமுக கட்சிக்காரர்கள் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள். என்னிடம் சுட்டிக்காட்டியும் இருக்கிறார்கள்.
சில இடங்களில் என்று நான் கூறியதை ஊதி பெரிதுபடுத்துகிறார்கள். திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை, அவர்களின் கனவு நனவாகவில்லை. அவர்களின் ஆசையில் மண் விழுந்துவிட்டது. திமுக கூட்டணியை சிதறடிக்க முயற்சித்தார்கள். அத்தனை சதிகளையும் முறியடித்த கட்சி விசிக.
விஜய்யை முன்வைத்து பல சூதாட்டக் காய்களை நகர்த்துகிறார்கள். பாஜக ஆதரிக்கும் வட இந்தியா நிறுவனங்கள்தான் அதிமுக கூட்டணிக்கு முன்னிலை என தெரிவித்து உள்ளன.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். ஆகவே, எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். திமுக ஆட்சி தொடரும்” என்றார்.