மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வரவு வைக்கப்படுமா என்பது குறித்து...
திமுக அரசு கொண்டு வந்த, மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையானது இந்த மாதம் வழங்கப்படுமா என்பது மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவிலேயே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
Advertisement
தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, முன்கூட்டியே 3 தவணைகளுக்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ.3 ஆயிரம், கோடைக் கால சிறப்புத் தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரத்தை மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு வரவு வைத்தது.
இதுவரை தமிழ்நாட்டில் 1,13,75,492 பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 30,838 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மகளிரின் வங்கிக் கணக்கிலும் ரூ.26,000 செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையானது பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருந்தாலும், இந்தத் திட்டம் அரசு திட்டம் என்பதால் நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வரவு வைக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தவெக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தவுடன் அந்தக் கட்சி வாக்குறுதியாக அளித்துள்ள ரூ. 2,500 ரொக்கத் தொகை, புதிய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.