மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய் அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை பற்றி முதல்வர் விஜய் அறிவிப்பு....
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முந்தைய திமுக அரசு கொண்டு வந்த புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களின் பயனாளிகளுக்கு மாதந்தோறும் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
தற்போது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், மாதம்தோறும் 7 ஆம் தேதி வரவுவைக்கப்படும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட நிதி பயனாளிகளுக்கு வராமல் இருந்தது.
இதுபற்றி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். முந்தைய அரசு திட்டங்கள் தொடர வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அதன்படியே, முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், எப்போது கிடைக்கும் என மகளிர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகளிர் உரிமைத் தொகை வழக்கம்போல நாளையோ அல்லது சற்று தாமதமாகவோ கிடைக்கலாம்.
அதேபோல தவெக ஆட்சி அமைந்தால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்த நிலையில் அதனை நடைமுறைக்கு கொண்டு வர கால அவகாசம் வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.
Magalir urimai thogai for may month will be given soon: CM vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.