மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! ரூ.2,500 எப்போது?
மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைக்கப்பட்ட நிலையில், ரூ.2,500 எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், ஜூன் மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று வரவுவைக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது மாதமாக திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அதே ரூ.1000 வரவு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ரூ.2500 எப்போது கிடைக்கும் என பெண்கள் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றார். அப்போது, திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் தொடருமா அல்லது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தவெக அளித்த வாக்குறுதியின்படி, மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.
Advertisement
Advertisement
ஆனால், இதுபற்றி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த முதல்வர் விஜய், முந்தைய அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்றார்.
அதன்படி, அடுத்த நாளே புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டது.
இதனிடையே, தேர்தலில் தவெகவின் முக்கிய வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் என்பது நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், மே மற்றும் ஜூன் மாதங்களில் வழக்கம்போல் ரூ.1,000 வரவுவைக்கப்பட்டுள்ளது. இதனால் தவெக வாக்குறுதிபடி ரூ. 2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதமே, முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், எவ்வளவு கால அவகாசம் என்பதை குறிப்பிடவில்லை. இதுவரை எப்போது அதற்கான நடைமுறைகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், வழக்கமாக மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்படும் 15 ஆம் தேதியான இன்று ஜூன் மாதத்துக்கான ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல ரூ.1000 வரவு வைக்கப்பட்டதே என்று நினைத்து மகிழ்வதா? அல்லது இன்னமும் ரூ.2500 வரவில்லையே என கலங்குவதா? என்ற குழப்பத்தில் உரிமைத் தொகை பெறும் பெண்கள் உள்ளனர்.