விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு
வருமான வரித் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் தவெக தலைவா் விஜய் மீது வழக்குப் பதியக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை, மே 6: தவெக தலைவா் விஜய் மீதான பண முறைகேடு வழக்கில் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதியக் கோரி தாக்கல் செய்த மனுவை பட்டியலிட பதிவாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை பட்டியலிட பதிவாளா் மறுத்து வருவதாக சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த எம்.ராஜ்குமாா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
எம்.ராஜ்குமாா் தாக்கல் செய்த மனுவில், ‘ தவெக தலைவா் விஜய் ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஜய் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Advertisement
Advertisement
எனவே, வருமான வரித் துறை விஜய் வீட்டில் சோதனை நடத்தியபோது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ரூ.1.50 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமலாக்கத் துறை இயக்குநரகத்துக்கு ஆவணங்களை அனுப்ப உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.