தவெக பெண் தொண்டர்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யத் தடை!
தவெக பெண் தொண்டர்கள் குறித்து சர்ச்சையாகப் பேசியதாக, பொன்ராஜ் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை...
சென்னை: தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் போலீஸார் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக அரசியல் விமர்சகரும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜ் மீது கடந்த மார்ச் 26-ஆம் தேதி அமைச்சர் நிர்மல்குமார் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், கடந்த மே 12-ஆம் தேதி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரும், கடலூர் போலீஸாரும் பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்த சம்பவம் குறித்து, காவல் ஆணையருக்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்பிவிட்டேன். சம்பந்தப்பட்ட பேட்டியில் இடம்பெற்ற அந்த குறிப்பிட்ட பகுதியும் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. 2 மாதங்களுக்குப் பிறகு, புகார்தாரர் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேர்காணல் நடத்தியவர் எழுப்பிய கேள்விக்கு மட்டுமே நான் பதில் அளித்தேன். பெண்களுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Advertisement
Advertisement
எனது பேட்டியின் ஒரு பகுதியை தவறாக திரித்து என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தவெகவினர் எனக்கு மிரட்டல் விடுத்தது குறித்து நான் அளித்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வரும் 29-ம் தேதிக்குள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மற்றும் கடலூர் போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை, இந்த வழக்குகளில் போலீஸார் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
Controversial remarks on TVK female cadres: Stay on filing the final report in Ponraj case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.