வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பற்றி வானிலை மையம் தெரிவிப்பது..
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெய்யிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தாலும், அவ்வப்போது ஒருசில இடங்களில் மழை பெய்து பூமியைக் குளிர்வித்து வருகின்றது. இந்த நிலையில் குளிர்ச்சியான செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாகத் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வங்கக்கடலில் உருவாகும் இந்தத் தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகரக்கூடும் என்பதால், கடலோர மாவட்டங்களிலும் மேகமூட்டமான சூழலும், அவ்வப்போது சாரல் மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.