போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 ரெளடிகள் கைது செய்யப்பட்டது பற்றி...
தமிழகத்தில் ரெளடிகள், போதைப் பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடந்த 3 நாள்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 1,233 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் ரெளடிகளை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்கள், பாக்கு உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தவும் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் பொது அமைதியை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உறுதி பூண்டுள்ளது. அதன் பகுதியாக தமிழகம் முழுவதும் ரெளடிகள், போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை காவல் துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவின்பேரில், போலீஸாா் மேற்கொண்டனா். அதன்படி, 12,660 குற்றவாளிகள் உள்பட 15,349 ரெளடிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதில் காவல் துறை விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாக இருந்தவா்கள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தவா்கள், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவா்கள் என்று அடையாளம் காணப்பட்ட 488 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 844 போ் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டனா். விசாரணைக்கு பின்னா் 844 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனா்.
ரூ. 1.43 கோடி போதைப் பொருள் பறிமுதல்: போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து ரூ. 1,43,78,200 மதிப்புள்ள 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரௌடிகளை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்களை ஒழிக்கவும் தமிழக காவல் துறை கடுமையான நடவடிக்கையைத் தொடா்ந்து எடுக்கும் என்று டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்துள்ளாா்.
மேலும் அவா், பொது அமைதியையும்,பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும், அனைத்து வகையிலான குற்றச் செயல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறை உறுதி பூண்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.