திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு
திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்திட வேண்டும்.
திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு நேரில் சென்று அவற்றின் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள், பிரசாத விற்பனை நிலையம் ஆகியற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில் நிர்வாகங்களும் பிரசாதம் விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை தொடர்ச்சியாக ஆய்வு செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது அல்லது காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்டறியப்பட்ட பிரசாத கடையின் விற்பனை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, இது குறித்து அமைச்சர் அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டுமென்றும், தகுதியான அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அந்தக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து திருக்கோயில்களிலும் FSSAI வழிகாட்டுதல்கள், உணவுப் பாதுகாப்பு தரநிலைகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் குடிநீர் தரக் கட்டுப்பாடுகள் ஆகியவை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். இதனை சம்மந்தப்பட்ட இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொடர்ந்து தூய்மை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.