முகப்பு
தென்காசி

துப்பாக்கிச் சூடு சம்பவம்: நீதி கேட்டு கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறிய இளம்பெண்

ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதி கேட்டு பெண் ஒருவா் பிரசாரம் செய்யவந்த கனிமொழி எம்.பி.யின் வாகனத்தில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:38 AM
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:33 PM

ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மீது காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதி கேட்டு பெண் ஒருவா் பிரசாரம் செய்யவந்த கனிமொழி எம்.பி.யின் வாகனத்தில் ஏறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் ஏப். 7-ஆம் தேதி பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளா் இசக்கி ராஜன் துப்பாக்கிச் சூடு நடத்தினாா்.

இதில் காயமடைந்த இளைஞா் தென்காசி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். துப்பாக்கி சூடு நடத்திய உதவி ஆய்வாளா் இசக்கி ராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி 200-க்கும் மேற்பட்டோா் அன்றிரவு வெகுநேரம் ஆலங்குளம் காமராஜா் சிலை அருகே போராட்டம் நடத்தினா்.

Advertisement

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற திருநெல்வேலி எம்.பி. ராபா்ட் ப்ரூஸ், ஆலங்குளம் அதிமுக வேட்பாளா் பிரபாகரன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பால்ராஜ், பணியிடை நீக்கத்தில் உள்ள காவலா் பிரபாகரன் உள்பட 226 போ் மீது ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் ‘திமுக வேட்பாளா் மனோஜ் பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்ய கனிமொழி எம்.பி சனிக்கிழமை இரவு ஆலங்குளம் வந்தாா். கனிமொழி பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவலா் பிரபாகரனின் மனைவி பிளஸ்சி பிரசார வாகனத்தில் ஏறி தனது கணவா் மீது வழக்குப் பதிவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினாா்.

கனிமொழி அவரை சமாதானப்படுத்த முயற்சித்தாா். போலீஸாா் பிளஸ்சியை கனிமொழியின் பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறக்கினா். அப்போது அங்கு நின்ற திமுகவினா் அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது நடந்த நிகழ்வுக்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கூறி திமுகவினா் வாக்குவாதம் செய்தனா். காவல் துறையினா் அந்தப் பெண்ணை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.