கம்பம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் திருட்டு: சிறப்பு பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது
கம்பம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்டதால், அப்பெண்
கம்பம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்டதால், அப்பெண் உயிரிழந்துவிட்டதாக கணவர் அளித்த புகாரினைத் தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை 5 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழு செய்த பிரேதப் பரிசோதனையை விடியோவில் பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், கூடலூர் ஆவுலுஜக்கு கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் சம்பத், விவசாயி. இவரது மனைவி விஜயாவுக்கு (40) அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால், சில மாதங்களுக்கு முன் கம்பம் ரேஞ்சர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அம்மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு, 4 அறுவைச் சிகிச்சைகளும் நடத்தப்பட்டதாம். ஆனாலும், அவருக்கு நோய் தீர்ந்தபாடில்லை. இதனால், அங்குள்ள மருத்துவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாள்களுக்கு முன் உள் நோயாளியாக விஜயா சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மதுரை அரசு மருத்துவமனையில் செய்த பரிசோதனையில், விஜயாவின் கர்ப்பப் பையில் புற்று நோய் உள்ளதாகவும், புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் தவறான சிகிச்சை அளித்துள்ளதாகவும், மேலும் விஜயாவின் உடலில் இருந்து சிறுநீரகம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவரது உடல் நிலை மோசமாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் இருந்து மீண்டும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, 15 நாள்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) மதுரை கே.கே. நகரிலுள்ள அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி, விஜயாவை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால், கூடலூருக்குச் செல்லும் வழியிலேயே விஜயா உயிரிழந்தார்.
இதையடுத்து, விஜயாவின் கணவர் சம்பத், தனது மனைவியின் சிறுநீரகம் கம்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருடப்பட்டுள்ளது. இதனால், அவர் உயிரிழந்துவிட்டார். எனவே, தனியார் மருத்துவமனை மீதும் அந்த மருத்துவமனை மருத்துவர் மீதும் சிறுநீரகம் திருடியதாக, கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தெற்கு காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிந்து, விஜயாவின் சடலத்தை சிறப்பு பிரேதப் பரிசோதனை செய்ய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விஜயாவின் சடலத்தை புதன்கிழமை 5 மருத்துவர்கள் கொண்ட குழு சிறப்பு பிரேதப் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முழுவதும், இந்திய மருத்துவ சட்டத்தின் கீழ் விடியோ பதிவுடன் மேற்கொண்டதாகவும், இதில் விஜயாவின் உடலில் ஒரு சிறுநீரகம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், விஜயா மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தபோது செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் குறித்து அறிக்கை கேட்டுள்ளதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
பின்னர், மாலை கூடலூரில் போலீஸார் பாதுகாப்புடன் பொது மயானத்தில் விஜயாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அதேநேரத்தில், கம்பம் ரேஞ்சர் அலுவலக சாலையில் உள்ள தனியார் சிறுநீரக சிறப்பு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.