கேரளத்துக்கு கஞ்சா கடத்திய கம்பம் இளைஞர் கைது
கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இளைஞரை, கேரள போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது
கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இளைஞரை, கேரள போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
கம்பத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் தொடர்ந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, தமிழக-கேரள எல்லையான குமுளியில், கேரள மாநில சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்துபவர்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தமிழக எல்லையிலிருந்து கேரளத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் கேரள போலீஸார் அழைத்துள்ளனர். ஆனால், அந்த இளைஞர் கேரள பஸ் நிலையத்துக்குள் ஓடத் தொடங்கியுள்ளார்.
Advertisement
Advertisement
உடனே, கேரள போலீஸார் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்துள்ளனர். பின்னர், அவரிடம் நடத்திய சோதனையில், இளைஞரின் வயிற்றுப் பகுதியில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில், இவர் கம்பம் வடக்குபட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் விஜய் (25) எனத் தெரியவந்தது. மேலும், இந்த இளைஞர் அடிக்கடி கூலிக்காக கஞ்சா கடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விஜய் மீது வழக்குப் பதிந்து கஞ்சாவை பறிமுதல் செய்த கேரள போலீஸார், இளைஞரது செல்போனில் உள்ள எண்கள் மூலம் கேரளத்தில் இவர் யார் யாரிடம் கஞ்சா விற்று வந்தார் என்பது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.