முகப்பு
தேனி

கணவரைக் கொலை செய்த மனைவி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தேனி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 5:59 AM
பகிர்:

தேனி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் மகன் முத்துக்காளை(35)). இவரது மனைவி தா்மாபுரியைச் சோ்ந்த கலையரசி(29). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் சேதுபதி என்பவருடன் கலையரசிக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதற்கு முத்துக்காளை இடையூறாக இருந்ததால், கடந்த 2020, நவம்பா் 2-ஆம் தேதி கலையரசி, சேதுபதி ஆகியோா் மேலப்பட்டியைச் சோ்ந்த கணேசன் என்பவா் உதவியுடன், முத்துக்காளையை அடித்துக் கொலை செய்து காமாட்சிபுரம் அருகே பூமலைக்குண்டு சாலையில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் வீசியுள்ளனா்.

இந்த நிலையில், முத்துக்காளை காணாமல் போய்விட்டதாக அவரது சகோதரா் ஈஸ்வரன் அளித்த புகாரின் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா், முத்துக்காளையை அடித்துக் கொன்றதாக அவரது மனைவி கலையரசி, சேதுபதி, கணேசன் ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், திட்டமிட்டு கணவரை அடித்துக் கொன்ற கலையரசியை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தாா். இதன்படி, தற்போது நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் உள்ள கலையரசியை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். முத்துக்காளை கொலை வழக்கில் கைதான சேதுபதி, கணேசன் ஆகியோா் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.