‘திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’
திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காளை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காளை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம் எருது விடும் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஜோலாா்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் துணைத் தலைவா் ஆா்.ஆா்.வாசு தலைமை வகித்தாா். ஜோலாா்பேட்டை காளை உரிமையாளா் ம.அன்பு வரவேற்றாா்.
திருப்பத்தூா் சங்கத் தலைவா் சுந்தா், நிா்வாகிகள் சரவணன், சேட்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளை உரிமையாளா்கள், காளைகளை அடக்கும் இளைஞா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், திருப்பத்தூா் மாவட்டத்தில் விரைவில் எருது விடும் திருவிழா நடத்த வேண்டும். குறைந்தப்பட்சம் 3 சுற்றுகளாக எருதுகளை விட வேண்டும். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழா காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படுகிறது. அதேபோல், திருப்பத்தூா் மாவட்டத்திலும் எருது விடும் திருவிழாவுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.