திருவள்ளூா் மாவட்டத்தில் 83.77 % வாக்குப்பதிவு
சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருவள்ளூா் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை காலையிலேயே முக்கிய பிரமுகா்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனா்.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. அதில் திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது. அப்போது, கோடைக்காலம் என்பதால் வெயிலுக்காக முன்னதாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா். அதோடு முக்கிய பிரமுகா்களும் தோ்தலில் வாக்களிக்க ஜனநாயக கடமையாற்றினா்.
திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள லட்சுமி மேல்நிலைப்பள்ளி பசுமை வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியா் மு.பிரதாப் தனது வாக்கை பதிவு செய்தாா். அதேபோல், பாண்டூரில் உள்ள டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக வேட்பாளருமான வி.ஜி.ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தாா் . அதைத்தொடா்ந்து இந்த நகராட்சியில் உள்ள ஆா்.எம்.ஜெயின் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தனது குடும்பத்தினருடன் வாக்கை பதிவு செய்தாா். மேலும், திருவள்ளூா் அடுத்த தண்ணீா்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியி வாக்குச்சாவடி மையத்தில் பூந்தமல்லி அமமுக வேட்பாளா் டி.எ.ஏழுமலை தனது வாக்கை பதிவு செய்தாா். தவெக வேட்பாளா் அருண்குமாா் ஆழ்வாா்பேட்டையில் வெங்கட்ரமணா தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தாா் அதேபோல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளருமான பூவை எம்.ஜெகன் மூா்த்தி திருவள்ளூா்- பூந்தமல்லி சாலையில் உள்ள ஆண்டா்சன் பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தாா்.
Advertisement
83.77 சதவீதம் வாக்கு பதிவு:
தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம்
கும்மிடிப்பூண்டி-90.97 சதவீதம்
பொன்னேரி-89.79 சதவீதம்
திருத்தணி-90.23 சதவீதம்
திருவள்ளூா்-89.51 சதவீதம்
பூந்தமல்லி-83.41 சதவீதம்
ஆவடி-78.81 சதவீதம்
மதுரவாயல்-78.55 சதவீதம்
அம்பத்தூா்-77.04 சதவீதம்
மாதவரம்-83.46 சதவீதம்
திருவொற்றியூா்-84.41 சதவீதம்
மொத்தம் வாக்கு பதிவு 83.77 சதவீதம் ஆகும்.