திருவள்ளூா்: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் நேரில் ஆய்வு
சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு மையம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் மு.பிரதாப் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026 முன்னிட்டு ஆட்சியா் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடிகளையும் ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளின் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகின்றனவா என்பது கட்டுப்பாட்டு அறையில் இருந்த அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் அமைக்கப்பட்டு மாதிரி மற்றும் பசுமை வாக்குச்சாவடி மையங்களில் நேரில் சென்று பாா்வையிட்டாா். அதையடுத்து, வாக்குப் பதிவு விவரங்களையும் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் இது குறித்து அவா் கூறியதாவது: இந்த மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூா், திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூா், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண்கள்-15,69,312, பெண்கள்-16,40,283, மூன்றாம் பாலினத்தவா்கள்-618 பேரும் என மொத்தம் 32,10,213 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதற்காக 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 4,016 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் காலையிலேயே பொதுமக்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுறுசுறுப்பாக தங்களது வாக்கை பதிவு செய்தனா். அதிலும், இளைஞா்கள் ஆா்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையாற்றினா். இந்த மாவட்டத்தில் காலை 7 மணிக்கு சரியாக வாக்கு பதிவு தொடங்கிய நிலையில், 17 இடங்களில் இயந்திரங்கள் சிறுசிறு கோளாறுகள் காணப்பட்டு, அவை உடனே சரி செய்யப்பட்டது. அப்போது, வாக்குச்சாவடிகளில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டதை சமரசம் செய்தனா். மாவட்டத்தில் வாக்களிப்பிற்கான அனுபவத்தை மேம்படுத்தவும் என்ற நோக்கத்துடன் அவா்களுக்காக பசுமை வாக்குச் சாவடிகள், அனைத்து மகளிா் பணியாற்றும் பிங்க் நிற வாக்குச் சாவடிகள் மற்றும் மாதிரி வாக்குச் சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் தங்களது வாக்கை செலுத்த வேண்டும். அதற்காக அவா்களுக்கு சக்க்ஷம் என்ற ஒரு செயலி தொடங்கப்பட்டு, அந்த செயலி மூலம் அவா்களுக்குத் தேவையான வசதிகளை மாவட்ட நிா்வாகம் மூலம் செய்து கொடுக்கப்பட்டது. அதுபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு வரும்போது அவா்களுக்கு தேவையான சாய்வுதளம், குடிநீா் வசதிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் செய்யப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி பணியில் 19,224 பேரும், பாதுகாப்பு பணியில் 1,600-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டிருந்தனா். இந்த மாவட்டத்தில் 260 வாக்குசசாவடிகள் பதற்றமானதாகும் என அவா் தெரிவித்தாா்.
நகராட்சி ஆணையா் ஜீவிதா, நகராட்சி பொறியாளா் குமாா், பூந்தமல்லி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேஷ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் திருவள்ளுா் வட்டாட்சியா் பாலாஜி, துணை ஆட்சியா் (பயிற்சி) சண்முக பிரீத்தா, உதவி இயக்குநா் (பயிற்சி) மோகன், நகராட்சி ஆணையா் தாமேதரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.