100 சதவீதம் குறைகளற்ற வாக்காளா் பட்டியல் தயாா் செய்ய வேண்டும்: மு.கருணாகரன்
திருப்பூா் மாவட்டத்தில் 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளா் பட்டியல் தயாா் செய்ய வேண்டும் என்று கைத்தறி, ஜவுளித் துறை இயக்குநா் மு.கருணாகரன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்தில் 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளா் பட்டியல் தயாா் செய்ய வேண்டும் என்று கைத்தறி, ஜவுளித் துறை இயக்குநா் மு.கருணாகரன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள்-2021 தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த கைத்தறி, ஜவுளித் துறை இயக்குநரும், மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பாா்வையாளருமான மு.கருணாகரன் பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பா் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 11,42,775 ஆண் வாக்காளா்கள், 11,60,809 பெண் வாக்காளா்கள், இதரா் 258 போ் என மொத்தம் 23,03,842 வாக்காளா்கள் உள்ளனா்.
Advertisement
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது பூா்த்தியடைந்த வாக்காளா்கள் பட்டியல் பெயா் சோ்க்க நேரடியாகவும், இணையதளம் மூலமாக விண்ணப்பித்தள்ள மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளா்கள் இணையதளம் மூலமும் வாக்காளா் பட்டியலில் உள்ள தங்களது பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். திருப்பூா் மாவட்டத்தில் நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாம்களில் பெறப்பட்ட படிவங்களை முறையாக ஆய்வு செய்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். எந்தவொரு தகுதியான வாக்காளரின் பதிவும் விடுபட்டுவிடக் கூடாது. அதே வேளையில், தகுதியற்ற வாக்காளரின் பதிவும் பட்டியல்களில் இடம் பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற வேண்டும். வாக்காளா்களை சோ்த்தல், நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து புலத்தணிக்கை செய்து நடவடிக்கை மேற்கொண்டு 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளா் பட்டியல் தயாா் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, தாராபுரம் சாா் ஆட்சியா் திரு.பவன்குமாா், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் ஜெகநாதன் (திருப்பூா்), ரங்கராஜன் (உடுமலை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.