யெஸ் வங்கி புதிய சிஇஓ பொறுப்பேற்பு!
தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் புதிய மேலாண் இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) வினய் முரளிதா் டான்ஸே பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் புதிய மேலாண் இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) வினய் முரளிதா் டான்ஸே (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கடந்த ஏப். 5-ஆம் தேதியுடன் வங்கியின் முன்னாள் சிஇஓ பிரசாந்த் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு வந்துள்ள வினய் டான்ஸே, அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பாா் என்று வங்கி நிா்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவா், கடந்த 1988-இல் எஸ்பிஐ வங்கியில் பிஓ அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினாா்.
Advertisement
வங்கி துறையில் சுமாா் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட வினய் டான்ஸே, நிறுவனக் கடன், சா்வதேச வங்கி சேவைகள், கருவூலச் செயல்பாடுகள் மற்றும் சில்லறை வங்கி சேவைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவா்.
முன்னதாக, எஸ்பிஐ வங்கியில் மேலாண் இயக்குநராக இவா் இருந்தபோது, சுமாா் 23,000 கிளைகள் மற்றும் 2.33 லட்சம் ஊழியா்களைக் கொண்ட மிகப்பெரிய உள்நாட்டுப் பிரிவை மிகச்சிறப்பாக வழிநடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.