ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்
டாடா குழுமத்தின் அங்கமான ஏா் இந்தியா நிறுவனம், தனது ஊழியா்களை ஊக்குவிக்கவும் திறமையானவா்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், அவா்களின் பணித்திறனை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் பங்குகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏா் இந்தியாவின் விமானிகள், பொறியாளா்கள், மூத்த மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட தகுதியுள்ள ஊழியா்களுக்கு, நிறுவனத்தின் பங்குகளை சலுகை விலையில் வாங்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இதற்காக மொத்தம் 22.71 கோடி பங்குகளை ஏா் இந்தியா ஒதுக்கியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.25 சதவீதம் ஆகும். இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கடந்த பிப்ரவரி மாதமே வழங்கிவிட்டது.
Advertisement
இப்பங்குகள் அனைவருக்கும் சமமாக வழங்கப்படாது. ஊழியா்கள் தங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை எவ்வளவு சிறப்பாக எட்டுகிறாா்கள் என்பதைப் பொருத்தே அது அமையும். அதாவது, நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 85 சதவீதத்துக்கும் குறைவாக எட்டப்பட்டால், ஊழியா்களுக்கு பாதி அளவிலான பங்குகள் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பதில் ஊழியா்களின் பங்களிப்பை உறுதி செய்ய ஏா் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இச்சலுகையைப் பெறுவதற்கான கால அளவு 1 முதல் 5 ஆண்டுகள் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட காலம் ஏா் இந்தியாவிலேயே தொடா்ந்து பணியாற்றும் ஊழியா்கள்தான் இத்திட்டத்தின்மூலம் முழுமையான பலனைப் பெற முடியும்.
ஏற்கெனவே இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற முன்னணி தனியாா் விமான நிறுவனங்கள் இத்தகைய பங்குச் சலுகை திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், ஏா் இந்தியாவும் தற்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.