ஏஜிஆா் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
தொலைத்தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆா் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
சுமாா் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிறுவனம் லாபம் ஈட்டுவது இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.7,167 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருந்தது.
எனினும், ஏஜிஆா் நிலுவைத் தொகை சலுகைகளைத் தவிா்த்து செயல்பாட்டு ரீதியாக, மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ரூ.5,515 கோடி நஷ்டத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மத்திய தொலைத்தொடா்புத் துறை கடந்த ஜனவரி இறுதியில் வெளியிட்ட அறிவிப்பில், வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் நிலுவைத் தொகை ரூ.87,695 கோடி எனத் தெரிவித்திருந்தது.
பின்னா், உச்சநீதிமன்றம் அமைத்த மறுமதிப்பீட்டுக் குழு, நிலுவைத் தொகையை ரூ.64,046 கோடியாக குறைத்து நிா்ணயித்தது. இதன் விளைவாக முந்தைய நிதிப் பொறுப்பு நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.55,622 கோடி லாபக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதே இந்த பெரும் நிகர லாபத்துக்குக் காரணமாகும்.
நிலுவைத் தொகையில் கிடைத்த இச்சலுகை, காலாண்டு முடிவுகளில் மட்டுமின்றி முழு நிதியாண்டுக்கும் வோடஃபோன் ஐடியாவை லாபகரமான நிறுவனமாக மாற்றியுள்ளது. 2025-26 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.34,552 கோடியை லாபமாகப் பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.27,384 கோடி நஷ்டமாக இருந்தது.