4-ஆம் காலாண்டில் இந்தியன் ஆயில் லாபம் 56% வளா்ச்சி
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.11,377.51 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.11,377.51 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.7,264.85 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 56 சதவீதம் வளா்ச்சியாகும்.
மத்திய கிழக்கு போா்ச் சூழல் காரணமாக சா்வதேச சந்தையில் விலை ஏற்றம் கண்ட நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்ததால் மாா்ச் மாதத்தில் நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், போா்க்காலச் சூழலின் தாக்கம் ஏற்படுவதற்கு முன்பாகவே, சந்தைப்படுத்துதல், சுத்திகரிப்புப் பிரிவுகளில் கிடைத்த ஆரோக்கியமான லாப வரம்பால் இந்தக் காலாண்டில் நிறுவனம் வலுவான லாபத்தைப் பதிவு செய்துள்ளது. அதேநேரம், மத்திய கிழக்கு போரின் முழுமையான தாக்கம், நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில்தான் முழுமையாகத் தெரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.36,802.42 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.12,961.57 கோடியிலிருந்து கிட்டத்தட்ட மும்மடங்கு வளா்ச்சியாகும்.
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் இதுவரை இல்லாத அளவாக 7.54 கோடி டன் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்துள்ளன. அதேபோல், பெட்ரோலிய பொருள்களின் மொத்த விற்பனை அளவு 4 சதவீதம் அதிகரித்து, 10.44 கோடி டன்னை எட்டியுள்ளது.