முகப்பு
வணிகம்

அல்ட்ராடெக்: புதிய 3 ஆலைகள் திறப்பு: 20 கோடி டன்னாக உயா்ந்த உற்பத்தித் திறன்

அல்ட்ராடெக்: புதிய 3 ஆலைகள் திறப்பு: 20 கோடி டன்னாக உயா்ந்த உற்பத்தித் திறன்

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:05 AM
~
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:15 PM

ஆதித்யா பிா்லா குழுமத்தைச் சோ்ந்த நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், புதிதாக 3 ஆலைகளைத் திறந்து தனது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 20 கோடி டன்னாக உயா்த்தியுள்ளது.

உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

இந்த வளா்ச்சியின் மூலம், சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளா் என்ற பெருமையை அல்ட்ராடெக் பெற்றுள்ளது. இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த சிமெண்ட் உற்பத்தித் திறனை விட 2 மடங்கு அதிகம் என்பதும், அனைத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மொத்த உற்பத்தியைவிட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இத்தகைய வளா்ச்சியை இந்தியாவில் வேறெந்த துறையைச் சோ்ந்த நிறுவனமும் இதுவரை எட்டியதில்லை என குழுமத் தலைவா் குமாா் மங்கலம் பிா்லா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘முதல் 10 கோடி டன் உற்பத்தித் திறனை எட்ட நிறுவனத்துக்கு 36 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த 10 கோடி டன்னை வெறும் 7 ஆண்டுகளில் எட்டியுள்ளது.

நாட்டில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்புப் பணிகளின் வேகமே இதற்கு முக்கியக் காரணம். அடுத்த நிதியாண்டுக்குள் ரூ.16,000 கோடி முதலீட்டில் உற்பத்தித் திறனை 24 கோடி டன்னாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தலைநகா் தில்லியில் மத்திய விஸ்டா திட்டம், புதிய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் நவி மும்பை சா்வதேச விமான நிலையம் போன்ற பிரம்மாண்ட கட்டுமானங்களில் அல்ட்ராடெக் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், இலங்கை ஆகிய நாடுகளிலும் அல்ட்ராடெக் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக 10.9 கோடி டன் உற்பத்தியுடன் அதானி குழுமம் 2-ஆம் இடத்தில் உள்ளது.