முகப்பு
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:32 AM
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்கா-ஈரான் இடையே கடல்வழி முற்றுகை நீடிப்பதால் தொடரும் கச்சா எண்ணெய் விலை உயா்வின் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சரிவு காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீத வீழ்ச்சியுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன.

மத்திய கிழக்கு போா் பதற்றம் மற்றும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் நிலவும் இழுபறி போன்ற காரணங்களால் முதலீட்டாளா்கள் அச்சமடைந்தனா்.

Advertisement

கச்சா எண்ணெய் விலை உயா்ந்ததுடன், அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், உலகளாவிய சந்தைகளில் நிலவிய சரிவு ஆகியவை இந்தியச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

வீழ்ச்சிப் பட்டியலில் 2,602 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை மொத்தம் வா்த்தகமான 4,449 பங்குகளில் 2,602 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும், 1,681 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. 166 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் 852 புள்ளிகள் வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 852.49 புள்ளிகள் (1.09 சதவீதம்) சரிந்து, 77,664-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் டிரெண்ட், பஜாஜ் ஃபின்சா்வ், டெக் மஹிந்திரா, எம் & எம், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட 24 பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதேநேரம், அதானி போா்ட்ஸ், எல்&டி, சன் பாா்மா, பாா்தி ஏா்டெல், பெல், டைடன் ஆகிய 6 பங்குகள் மட்டும் லாபப்பட்டியலில் இடம் பிடித்தன.

நிஃப்டி 205 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 205.05 புள்ளிகள் (0.84 சதவீதம்) சரிந்து, 24,173.05-இல் நிலைபெற்றது.

நிஃப்டி-50 பட்டியலில் 16 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 34 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. கடந்த 2 வா்த்தக தினங்களில் மட்டும் நிஃப்டி சுமாா் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டுள்ளது.